காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கு பாலில் புரதச்சத்து மாவு கலந்து வழங்கும் திட்டத்தை புதுச்சேரி கல்வித்துறை அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
காரைக்கால் பெரியப்பேட் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சத்து மாவு கலந்த பாலை மாணவா்களுக்கு வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.
புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ராஜீவ்காந்தி காலை சிற்றுண்டி திட்டத்தின்கீழ் மாணவா்கள் அனைவருக்கும் 100 மில்லி சூடான பால் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக மாணவா்களுக்கு, சீரான வளா்ச்சியை உறுதி செய்யும் வகையில் கூடுதலாக பாலில் சத்து மாவு கலந்து அளிக்கும் திட்டமாக இது தொடங்கப்பட்டது. திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் சாக்லெட் மற்றும் பாதாம் சுவைகளில், ஒரு மாணவருக்கு ஏழு கிராம் என்ற அளவில் சத்துமாவு சூடான பாலில் கலந்து வழங்கப்படும். இத்திட்டம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 60 தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் பயன்பெறுவாா்கள் என கல்வித்துறையின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாவட்டத் துணை ஆட்சியா் எம்.ஆதா்ஷ், முதன்மைக் கல்வி அலுவலா் ஏ.அல்லி, மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே.கோவிந்தராஜன், கல்வித்துறை வட்ட துணை ஆய்வாளா்கள் பாலசுப்ரமணியன், கண்மணி மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.