டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை: ஆட்சியர் அறிவுறுத்தல்

காரைக்காலில் டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல் பரவாத வகையில் நலவழித் துறையும்,

காரைக்காலில் டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல் பரவாத வகையில் நலவழித் துறையும், உள்ளாட்சித் துறையினரும் உரிய முன்னேற்பாடுகளை செய்யவேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா தலைமையில் ஆட்சியரகத்தில் மாவட்ட துணை ஆட்சியர் எஸ். பாஸ்கரன், நலவழித் துறை துணை இயக்குநர் கே. மோகன்ராஜ், நகராட்சி ஆணையர் எஸ். சுபாஷ் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளின் ஆணையர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
டெங்கு மற்றும் சிக்குன்குனியா காய்ச்சல் ஏற்படாத வகையில் இதுவரை செய்யப்பட்டிருக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆட்சியருக்கு விளக்கிக் கூறினர்.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சல் மாவட்டத்தில் எந்தவொரு பகுதியிலும் ஏற்படாத வகையில் விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகளை உள்ளாட்சித் துறையினரும், நலவழித் துறையினரும் எடுக்கவேண்டும். விரைவில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பொதுமக்கள் எவ்வாறெல்லாம் விழிப்புணர்வாக இருக்கவேண்டும் என்பது குறித்து நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அமைப்பினர், நலவழித் துறையினர் உரிய முன்னேற்பாடுகளை செய்யவேண்டும்.
அண்டை மாவட்டங்களில் இதுபோன்ற காய்ச்சல் ஏற்படும்பட்சத்தில், காரைக்காலில் அது பரவ வாய்ப்பிருக்கிறது. எனவே டெங்கு காய்ச்சல் உருவாக காரணமாகவுள்ள கொசுக்களின் புழுக்களை அழிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். தண்ணீர் தேங்கும் வகையில் பொது இடங்களில் உள்ள தேவையற்றப் பொருள்களை அப்புறப்படுத்துவோடு, மக்களுக்கும் இதுகுறித்து நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். கழிவுநீர் எந்த இடத்திலும் தேங்கி நிற்காத வகையில் உள்ளாட்சி அமைப்பினர் உரிய நடவடிக்கைகளை விரைவுபடுத்தவேண்டும்.
எனவே, வீடுகளிலும், வீட்டை சுற்றியுள்ள பகுதிகளிலும் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள மக்களுக்கு அறிவுறுத்துவதோடு,  வீட்டிலோ, சுற்றுப்புறத்திலோ டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடம், உபயோகித்த பிளாஸ்டிக் கப்புகள் போன்ற நீர் தேங்கும் வகையிலான பொருள்கள் இருந்தால் அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தவேண்டும்.
அரசு பொது மருத்துவமனையில் டெங்கு போன்ற காய்ச்சலுக்கான மருந்துகள் போதிய அளவில் இருப்பில் வைக்கவும், சிகிச்சை தரக்கூடிய வகையில் தகுதியை மேம்படுத்திக்கொள்ளவும் நலவழித் துறையினர் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்புக்கான புகை மருந்து தெளிக்கவேண்டுமெனவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com