காரைக்காலை சேர்ந்த 4 வயது சிறுவன் 200 திருக்குறளை தங்குதடையின்றி ஒப்பிப்பதற்காக அவருக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
காரைக்கால் அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ். சாய் சேஷாங் (4). அதே பகுதியில் உள்ள பிரைட் அகாதெமி பள்ளியில் யு.கே.ஜி. படித்து வரும் இவர் திருக்குறள் ஒப்பித்தலில் திறமையாக இருந்து வருகிறார்.
இச்சிறுவன், தற்போது 200 திருக்குறளை மனப்பாடமாக தங்கு தடையின்றி ஒப்பித்து வருகிறார். இதையறிந்த காரைக்கால் மாவட்ட கலைஞர்கள் மாமன்றத்தின் நிர்வாகிகள் சிறுவனுக்குப் பாராட்டு செய்ய முடிவு செய்து, அதன்படி மன்றத்தின் ஆலோசனைக் குழுத் தலைவர் காரைசுப்பையா இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்து, 200 குறளை ஒப்பிக்கச் செய்து சோதனை நடத்தப்பட்டது. சிறுவனின் நினைவாற்றலை பாராட்டும் வகையில், காரைசுப்பையா, புலவர் திருமேனிநாகராசன், தமிழாசிரியர் செல்லூர் மணியன் மற்றும் கு. பாலகங்காதரன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து பரிசுப் பொருள் வழங்கினர். நிகழ்ச்சியில், மாணவரின் பெற்றோர் மற்றும் மாமன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாமன்ற துணைத் தலைவர் த. தங்கவேலு, பொருளாளர்
டி. மோகன், இணைச் செயலர் பி. புஷ்பராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.