காரைக்காலில் பல்வேறு இடங்களில் தவறவிட்ட 7 செல்லிடப்பேசிகளை போலீஸார் மீட்டு உரியவர்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர்.
காரைக்காலில் பல்வேறு இடங்களில் தங்களது செல்லிடப்பேசிகளை தவறவிட்டுவிட்டதாக காரைக்கால் நகரக் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் அதை பயன்படுத்தியவர்கள் பல்வேறு நாள்களில் புகார் தெரிவித்திருந்தனர். இவற்றை மீட்கும் நடவடிக்கையில் காரைக்கால் காவல் துறை, சிறப்பு அமைப்பை ஏற்படுத்தி விவரங்கள் சேகரிப்பில் ஈடுபட்டது. அதன்படி ரூ.1 லட்சம் மதிப்புள்ள 7 செல்லிடப் பேசிகளை சிறப்புப்படை போலீஸார் பலரிடமிருந்து பெற்று, புகார்தாரர்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர். காவல் துறையினருக்கு செல்லிடப்பேசியை பெற்றுக்கொண்டவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது: செல்லிடப்பேசிகள் காணாமல்போனதாகவும், தவறவிட்டதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அவற்றை மீட்கும் வகையில் சிறப்பு அமைப்பை காவல் துறையில் ஏற்படுத்தி, செல்லிடப்பேசியின் நிரந்தர இ.எம்.ஐ. எண்களைக்கொண்டு, அது எங்கு பயன்பாட்டில் உள்ளது என்பதை கண்டறிந்து மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றனர்.