புதுத்துறை பகுதி விவசாயிகளுக்கு மண் மாதிரி பரிசோதனை சான்றிதழ் வழங்கப்பட்டதோடு, இலவசமாக குடையும் வழங்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், புதுத்துறை பாசனதாரர் சங்க ஆண்டு சிறப்புக் கூட்டம் புதுத்துறை கிராமத்தில் தலைவர் ஏ.கே. முகம்மது யாசின் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேளாண் கிராம அலுவலர் குமார் கலந்து கொண்டு, மண் மாதிரி எடுத்து பயிர் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்துப் பேசியதோடு, மத்திய அரசால் வழங்கப்பட்ட மண் மாதிரிக்கான பரிசோதனை சான்றிதழை வழங்கினார். மேலும், நீர் மேலாண்மை குறித்த கருத்துகளும் வேளாண் துறையினரால் வழங்கப்பட்டது. கூட்டத்தில், பாசனதாரர் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் பலரும், விவசாயிகளின் தேவைகள் குறித்து பல்வேறு கருத்துகளை விளக்கிப் பேசினர். சங்க நிர்வாகிகள் கணேசன், தமிழரசன், பக்கிரிசாமி உள்ளிட்ட 60 விவசாயிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், வரும் பருவமழையை கருத்தில்கொண்டு, விவசாயிகளுக்கு இலவசமாக குடை வழங்கப்பட்டது. நிறைவாக கணேசன் நன்றி கூறினார்.