திருப்பட்டினம் பகுதியில் 3 கோயில்களுக்கு திருப்பணி செய்வதற்கான இந்து சமய அறநிலையத் துறையின் ஆணை திருப்பணி குழுவினரிடம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
காரைக்கால் பகுதி திருப்பட்டினத்தில் மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீசுவரர் கோயில் வகையறாவைச் சேர்ந்த பெரியத்தெரு பொய்யாதமூர்த்தி விநாயகர் கோயில், கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோயில், சித்தர் மடமான குருசாமி கோயில் ஆகியவை உள்ளன. இவற்றுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டு ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட சூழலில், திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்ய அந்தப் பகுதியினர் ஜடாயுபுரீசுவரர் கோயில் நிர்வாகத்தை வலியுறுத்தினர். இதுதொடர்பாக புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 12 பேர் கொண்ட திருப்பணிக் குழுவினர் நியமித்து துறையின் ஒப்புதலுக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் பரிந்துரை செய்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, துறையின் ஆணையர் திருப்பணி செய்ய ஒப்புதல் தெரிவித்து ஆணையை வெளியிட்டார். இந்த ஆணையை சட்டப்பேரவை உறுப்பினர், திருப்பணிக் குழுவினரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தார். புதுச்சேரி அரசின் மூலம் திருப்பணிக்கான நிதி பெறுவதோடு, நன்கொடையாளர்கள் மூலம் நிதி சேகரித்து திருப்பணிகள் குறித்த காலத்தில் செய்து குடமுழுக்கு செய்ய திட்டமிட்டுள்ளதாக திருப்பணிக் குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜடாயுபுரீசுவரர் கோயில் தனி அதிகாரி
வீரசெல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.