புரட்டாசி மாத 2-ஆவது சனிக்கிழமையையொட்டி, காரைக்கால் பகுதியில் உள்ள பெருமாள் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயில் மூலவரான ரங்கநாதப் பெருமாள், ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள மூலவர் போன்று சயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் மூலவர் ரங்கநாதருக்கும், உத்ஸவர் நித்யகல்யாணப் பெருமாளுக்கும் பல்வேறு வகையான அலங்காரம் செய்யப்படுகிறது. அதன்படி, இரண்டாவது சனிக்கிழமையன்று மூலவர் பஞ்சாயுத சேவை சாதித்தார். உத்ஸவர் கோவர்த்தணகிரி கண்ணனாக (விரல் நுனியில் மலையை தூக்கிய காட்சியில்) ஸ்ரீதேவி பூமிதேவி சமேதராக அருள்பாலித்தார். மூலவரையும், உத்ஸவரையும் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர். இதேபோல், காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் உத்ஸவர் காஞ்சிபுரம் ஆதி அத்திவரதராக சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இக்கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் இரவு வரை தரிசனத்தில் ஈடுபட்டனர். திருமலைராயன்பட்டினத்தில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், வீழி வரதராஜப் பெருமாளுக்கு (மூலவர்) சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நாள் முழுவதும் பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்று பெருமாளை தரிசனம் செய்தனர்.