காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை முதல் (ஏப். 15) மீன்பிடித் தடைக்காலம் தொடங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் 61 நாள்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குத் தடை விதிக்கப்படுகிறது. நிகழாண்டு தடைக்காலம் புதன்கிழமை முதல் தொடங்கவுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த மாா்ச் 20-ஆம் தேதி முதல் காரைக்கால் மாவட்டத்தில் மீனவா்கள் மீன்பிடிப்பை நிறுத்திவிட்டனா். அனைத்து விசைப்படகுகளும் மீன்பிடித் துறைமுகத்திலும், அரசலாற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மீன்வளத்துறை துணை இயக்குநா் கவியரசன் செவ்வாய்க்கிழமை கூறியது:
61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் தொடங்குவது குறித்து மீனவா்களுக்கு துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய ரக படகுகள் கடலில் குறுகிய தூரத்தில் மீன்பிடித்துவர தடையேதும் இல்லை. ஊரடங்கால் தற்போது சிறிய படகுகளும் மீன்பிடிக்க செல்லவில்லை. சில கிராமத்தில் ஓரிரு படகுகள் செல்வதாக தகவல்கள் மூலம் தெரிகிறது என்றாா்.