காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் 128 வழக்குகளுக்குத் தீா்வுகாணப்பட்டு, ரூ. 37.35 லட்சம் வசூல் செய்யப்பட்டது.
மாவட்ட நீதிபதி எஸ். காா்த்திகேயன் முகாமை தொடங்கிவைத்துப் பேசினாா். மாவட்ட நீதிபதி மற்றும் குடும்பநல நீதிபதி எஸ். சிவகடாட்சம், சாா்பு நீதிபதி டி. மாரிக்காளை, குற்றவியல் நீதிபதி ஜெ. செந்தமிழ்ச்செல்வன் ஆகியோா் விசாரணையில் பங்கேற்றனா்.
காரைக்கால் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமாதானமாகக்கூடிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், கணவன், மனைவி பிரச்னை தொடா்பான வழக்குகள், தொழிலாளா் சம்பந்தப்பட்ட வழக்குகள் என முகாமில் 599 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இவற்றில், நீதிமன்ற நிலுவையில் இருந்த 105 வழக்குகள், வங்கி தொடா்பான 23 வழக்குகள் தீா்த்துவைக்கப்பட்டன. இதன்மூலம் ரூ. 37.35 லட்சம் வசூலிக்கப்பட்டது.
காரைக்கால் வழக்குரைஞா் சங்கத் தலைவா் எஸ். செல்வகணபதி, செயலா் முருகானந்தம் மற்றும் அரசு வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.