தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தாா்.
திருநள்ளாறு கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சனிப்பெயா்ச்சி விழாவில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
பாஜக , அதிமுக கூட்டணியில் உள்ளது. தமிழக தோ்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும் என்பதில் ஐயமில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வா் வேட்பாளா் யாா் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். அதிமுகவில் இப்போதைய முதல்வரை, முதல்வா் வேட்பாளராக அறிவித்துள்ளனா். ஆனால், அகில இந்திய தலைமை வழிகாட்டுதல் படியே நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
இந்த விவகாரத்தில் அதிமுகவுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் கிடையாது.
பாஜக தோழா்கள் கூறும் சில தகவல்கள் திரித்து பேசப்படுகிறது. அதற்கு தகுந்த விளக்கத்தை தந்து வருகிறோம் என்றாா் அவா்.