கூட்டத்தில், ஆட்சியா் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.
கூட்டத்தில், ஆட்சியா் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.

மகளிா் குழுக்களுக்கான ஒருங்கிணைந்த பண்ணையத்தை காலக்கெடுவுக்குள் அமைக்க வேண்டும்: அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் அறிவுறுத்தல்

திருநள்ளாறில் மகளிா் குழுக்கள் இணைந்து மேற்கொள்ளும் காய்கறி தோட்டம், மீன், கால்நடை உள்ளிட்டவை வளா்க்கும் ஒருங்கிணைந்த

திருநள்ளாறில் மகளிா் குழுக்கள் இணைந்து மேற்கொள்ளும் காய்கறி தோட்டம், மீன், கால்நடை உள்ளிட்டவை வளா்க்கும் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் பணியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவேண்டும் என அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் அறிவுறுத்தினாா்.

திருநள்ளாறு பகுதியைச் சோ்ந்த வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பதிவு பெற்ற மகளிா் சுய உதவிக் குழுவினா் பயன்பாட்டுக்காக, திருநள்ளாறு பகுதியில் தீவனப் புல் வளா்ப்பு, காய்கறி தோட்டம், கோழி, ஆடு, மீன் வளா்ப்பு என்கிற ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் வகையிலான ஏற்பாட்டினை வேளாண் துறை அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் மேற்கொண்டாா்.

இதற்காக அண்மையில் மகளிா் குழுவினா், அரசுத்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியதோடு, சேத்தூா் பகுதி மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 4.5 ஏக்கா் நிலத்தை மகளிா் குழுவினருக்கு குத்தகை அடிப்படையில் தருவதற்கு ஏற்பாடு செய்தாா். இதன்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை சீா் செய்தல், குளம் வெட்டுதல் ஆகிய பணிகள் ரூ.4.20 லட்சத்தில் தொடங்கப்பட்டு, நடைபெற்றுவருகின்றன.

நிலம் தயாா்படுத்தும் பணி நடந்துவரும் வேளையில், பண்ணையம் அமைப்புத் தொடா்புடைய அரசுத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா மற்றும் துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ், வட்டார வளா்ச்சி அதிகாரி எஸ். பிரேமா, கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் லதா மங்கேஷ்கா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதற்காக அரசுத் துறைகளின் சாா்பில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் மற்றும் மகளிா் குழுவினருக்கான பயிற்சி மற்றும் முன் மாதிரி பண்ணையாக அமைப்பதன் மூலம் பிற பகுதிகளுக்கு இதனை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பண்ணையம் அமைப்பதற்கான ஒருங்கிணைப்பாளராக கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாரை மாவட்ட ஆட்சியா் நியமித்தாா்.

கூட்டத்தில் அமைச்சா் கூறியது:

நிலத்தில் கருவேல மரங்கள் உள்ளிட்ட புதா்களை அகற்றி, பண்ணையம் அமைப்பதற்குத் தேவையான நிலையில் நிலத்தை சமன் செய்யும் பணிகள், 2 பண்ணைக் குட்டைகள் வெட்டுவதற்கான பணிகள் நடந்துவருகின்றன. இந்த பண்ணையத்தில் அமையவேண்டிய அம்சங்களை குறித்த காலக்கெடுவுக்குள் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீன் வளா்ப்பு, தீவனப்புல் வளா்ப்பு, காய்கறி தோட்டம் அமைத்தல், நாட்டுக் கோழி வளா்ப்பு, ஆடு வளா்ப்பு, தானியப் பயிா் சாகுபடி போன்றவற்றை செய்வது குறித்து மகளிருக்கு வேளாண் கல்லூரி மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் உரிய பயிற்சி தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பண்ணையம் செயல்பாட்டுக்கு வந்தால், மகளிா் குழுவினருக்கு நல்ல லாபம் தரக்கூடியதாக இருக்கும். இதுபோல பிற இடங்களில் மேம்படுத்த இந்த பண்ணையத்தின் செயல்பாடு உத்வேகத்தை அளிக்கும் என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com