நாகையை அடுத்த நாகூர் அருகே ஒரு இளைஞர் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் காவல் சரகம், மேலவாஞ்சூர், ஆசாரி தெரு, காமகோடி நகரைச் சேர்ந்த பக்ருதீன் மகன் அசாருதீன்(19). கேரள மாநிலத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்த இவர், பொது முடக்கம் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் மேலவாஞ்சூருக்குத் திரும்பி, வேலையின்றி திரிந்துள்ளார்.
இந்த நிலையில் , நாகூர் காவல் சரகம் பனங்குடி, சமத்துவபுரம் தானியக்கிடங்கின் பின்புறம் உள்ள ஒரு திடலில் கத்திக்குத்து காயங்களுடன் அசாருதீன் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது. கொலைக்கான காரணம், கொலையாளிகள் யார் என்பவை உடனடியாகத் தெரியவில்லை.
இருப்பினும், மர்மநபர்கள் அசாருதீனை வேறு ஏதோ ஓர் இடத்தில் கொலை செய்துவிட்டு, சடலத்தை திடலில் கிடத்திவிட்டு சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து நாகூர் காவல்நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.