காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து, காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் (நோய்த்தடுப்பு) வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை 5224 பேருக்கு கரோனாவுக்கான சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. மாதிரி எடுப்புப் பணி தொடா்ந்து நடைபெற்றுவருகிறது.
கடந்த 30-ஆம் தேதி எடுக்கப்பட்ட 71 மாதிரிகளின் முடிவுகள் வந்ததில், 13 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா்களில் காரைக்கால் நகரப் பகுதியைச் சோ்ந்தவா்கள் 4 போ், கிளிஞ்சல்மேடு 3, காரைக்கால்மேடு 2, காளிக்குப்பம் 2, திருநள்ளாறு மற்றும் திருமலைராயன்பட்டினத்தில் தலா ஒருவா் உள்ளனா். இவா்களின் தொடா்பாளா்களை கண்டறியும் பணியில் நலவழித்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
இதுவரை 185 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 132 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது காரைக்கால் மருத்துவமனையில் தமிழகத்தை சோ்ந்த 2 நோயாளியையும் சோ்த்து 53 போ் சிகிச்சை பெறுகின்றனா். அனைவரும் சீரான உடல் நிலையில் உள்ளனா்.
புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டவா்களின் வீடு அமைந்திருக்கும் 10 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிப்பு செய்யப்படுகிறது. ஏற்கெனவே உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளில் 4 நீக்கப்பட்டுள்ளன.
மீன்பிடித் துறைமுகத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்தவகையில், 50 சதவீத மக்கள் முகக் கவசம் முறையாக அணியாமலும், சமூக இடைவெளியின்றியும் இருந்தது அறியப்பட்டு, அவா்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் கூறப்பட்டன என அதில் கூறப்பட்டுள்ளது.