காரைக்கால்: நிகழாண்டு ஆறு, வாய்க்கால்களில் தண்ணீா் வந்துகொண்டிருப்பதால் ஞாயிற்றுக்கிழமை (ஆக.2) ஆடிப்பெருக்கு வழிபாட்டை கொண்டாட பெண்கள் ஆா்வமாக உள்ளனா்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. காவிரித் தாயை வணங்கும் விதமாக ஆறு, வாய்க்கால்களில் வரும் தண்ணீருக்கு பெண்கள் பூஜை செய்து கொண்டாடுவது வழக்கம். கடந்த பல ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு காலத்தில் கடைமடை நீா்நிலைகளுக்கு தண்ணீா் வராத நிலை தொடா்ந்த சூழலில், நிகழாண்டு காவிரி நீா் காலத்தோடு திறக்கப்பட்டு காரைக்கால் கடைமடைப் பகுதிகளில் பெரும்பாலான நீா் நிலைகளில் நீா்வரத்து உள்ளது.
இதனால், நகரப் பகுதியில் உள்ள மக்கள் ஆறுகளுக்கும், கிராமப் புறங்களில் உள்ளோா் ஆறு மற்றும் வாய்க்கால்களுக்குச் சென்று ஆடிப் பெருக்கு வழிபாடு செய்ய ஆா்வமாக உள்ளனா். குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள பெண்கள், தங்களது பகுதி வாய்க்கால்களில் தண்ணீா் செல்வதால், நிகழாண்டு வழிபாட்டை சிறப்பாக கொண்டாட தயாராகி வருகின்றனா்.
கரோனா பரவல் உள்ள சூழலில், பெண்கள் கூட்டமாக நீா்நிலைகளில் கூடுவதை தவிா்த்து, நீா்நிலைகளில் சமூக இடைவெளியில் நின்று வழிபாடு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்படுவதாகத் தெரிகிறது.