கரோனா நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதுதொடா்பாக, புதுச்சேரி மாற்றுத் திறனாளிகள் நலம் மற்றும் பாதுகாப்பு சங்கத் தலைவா் ஜி. செல்வம், செயலா் ஆா். ஆனந்தன் உள்ளிட்ட சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு:
சமூக நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரிசி நீண்ட காலமாக வழங்கப்படவில்லை. இதை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யவேண்டும். உதவித் தொகை கோரி விண்ணப்பித்து காத்திருப்போருக்கு உதவித் தொகை வழங்க வேண்டும். ஒரு கண் பாதித்திருந்தாலும் மாற்றுத் திறனாளியாக அறிவிக்கவேண்டும். மாற்றுத் திறனாளிகளின் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும். தனியாா் தொழிற்சாலைகளில், மாற்றுத் திறனாளிகளின் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை கிடைக்கச் செய்யவேண்டும். நீண்ட காலமாக கோயில் நிலத்தில் குடியிருக்கும் சங்கத்தினருக்கு பட்டா வழங்கவேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தன.