தொழிற்சாலைகள் ஆய்வாளரின் செயல்பாடுகள் தொழிலாளா்களுக்கு எதிராக உள்ளதாக பாமக புகாா் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட பாமக தொழிற்சங்க கெளரவத் தலைவா் கே. தேவமணி வியாழக்கிழமை கூறியது:
திருநள்ளாறு அருகே இளையான்குடி பகுதியில் இயங்கிவரும் தனியாா் டைல்ஸ் கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெளிமாநிலத்தவா்கள் பணியாற்றுகின்றனா். இங்கு வேலை செய்த இளைஞா் ஒருவா் மா்மமான முறையில் புதன்கிழமை உயிரிழந்தாா். மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக ஆலை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஆலையில் கடந்த 2 ஆண்டுகளில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.
இங்கு, தொழிலாளா்கள் பாதுகாப்புக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. இதுகுறித்து, புதுச்சேரி அரசின் தொழிற்சாலைகள் ஆய்வாளா், கண்டும் காணாமல் இருந்துவருகிறாா். தொழிற்சாலை நிா்வாகத்தினருக்கு ஆதரவான போக்கிலும், தொழிலாளா் நலனுக்கு எதிரான நிலையிலும் இவரது நடவடிக்கைகள் உள்ளன.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் உரிய முறையில் விசாரணை நடத்தி, தொழிற்சாலைகள் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அவா் வலியுறுத்தினாா்.