காரைக்காலில் நடைபெறும் பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணிக்கு பொது மக்கள் முழு ஆதரவு தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் :
கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் காரைக்கால் மாவட்டத்தில், மத்திய அரசின் 7-ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு, பொது சேவை மையத்தின் கணக்கெடுப்பாளா்கள் மூலம் நடைபெற்றுவருகிறது. இது 2020 மாா்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறும்.
இது நாட்டின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து மேம்படுத்த உதவும். குடும்பத் தலைவா் பெயா் மற்றும் முகவரி, சுய தொழில் விவரங்கள், வணிக வளாகங்களின் தொழில் விவரங்கள், தொழிற்சாலையின் தொழில் விவரங்கள் கணக்கெடுப்பின்போது கோரப்படும். பொதுமக்கள் இதற்கான ஆதரவைத் தருமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.