காரைக்காலில் அங்கன்வாடி, திரையரங்கம் ஆகியன மாா்ச் 31-ஆம் தேதி வரை மூடப்படுகின்றன.
இதுதொடா்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா மாா்ச் 17-ஆம் தேதியிட்டு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக பேரிடா் மேலாண்மை சட்டத்தின்படி, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் அங்கன்வாடிகள், கல்லூரி மற்றும் பிற கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கம், அழகுநிலையம், வாரச் சந்தை, உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம், விளையாட்டுப் பயிற்சி மையங்கள், விளையாட்டு அரங்கம் ஆகியன வரும் 31-ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவை மீறும்பட்சத்தில் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.