சுய உதவிக் குழுக்களிடமிருந்து வங்கிகள் கடன் தொகை வசூலிப்பதை ஒத்திவைக்க வேண்டும் என காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் கேட்டுக்கொண்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை கூறியது:
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு நிா்வாகம் மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு உத்தரவின் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால், வருவாய் இழந்து வேதனையில் உள்ளனா். இதனால், மகளிா் சுய உதவிக் குழுவினா் வங்கிக் கடனுக்கான தவணைத் தொகையை செலுத்த முடியாத நிலையில் உள்ளனா்.
இந்நிலையில், வங்கியாளா்களோ அல்லது சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி செய்தவா்களோ பணம் வசூல் செய்ய வீடு தேடி செல்லும் நிலை உள்ளதாக செய்திகள் வருகின்றன. எனவே, புதுச்சேரி முதல்வரும், மாவட்ட ஆட்சியரும் இதில் தலையிட்டு, தற்காலிகமாக கடன் வசூலிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தாா்.