காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா தீநுண்மி தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே சுரக்குடி பகுதியை சேர்ந்த 37 வயதுடைய கார் ஓட்டுநர் ஒருவர், வழக்கு ஒன்றில் திருநள்ளாறு காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டார். இவரை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை சிறையிடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சிறையிலடைப்பதற்கு முன்பு அவரை காவல்துறையினர் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில் அவருக்கு கரோனா தீநுண்மி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையொட்டி அவர் கடந்த 10-ஆம் தேதி காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு 2 முறை உமிழ் நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இதன் பிறகு சில நாள்கள் மருத்துவமனையிலேயே இவரை வைத்து மருத்துவர்கள் கண்காணித்துவந்தனர்.
இந்த நிலையில் அவரை மருத்துவமனை நிர்வாகம் செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ் செய்தது. அவர் வீட்டில் தனிமையில் இருந்து செயல்படுமாறு அறிவுறுத்தி அனுப்பிவைத்தது.
நலவழித்துறையினர் அவரை தொடர்ந்து கண்காணித்துவருவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
துபை நாட்டிலிருந்து அண்மையில் வந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இம்மாவட்டத்தில் தற்போது ஒருவர் மட்டுமே கரோனாவால் பாதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.