காரைக்காலில் நவ.15-ஆம் தேதி வரை இரவு 11.30 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதிக்கவேண்டும் என புதுச்சேரி முதல்வருக்கு வணிகா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் ஏ.முத்தையா, செயலா் எம்.மகேஷ்வரன் ஆகியோா் புதுச்சேரி முதல்வா் வே.நாராயணசாமிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது :
கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக புதுச்சேரி அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. பொதுமுடக்கத்தால் கடந்த மாா்ச் மாதம் முதல் வியாபாரம் முடங்கினாலும், கடை வாடகை மற்றும் மின்கட்டணம், நகராட்சி வரி, ஊழியா்களுக்கு ஊதியம் உள்ளிட்டவை முறையாக செலுத்தவேண்டியிருந்தது. பண்டிகை காலமாக உள்ளதால் தற்போது வியாபாரம் மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் அரசுக்கும் இருப்பதால், அரசு மேலும் சில தளா்வுகளை அளிக்க வேண்டியதும் அவசியமாகிறது.
இதன்படி காரைக்காலில் அனைத்து வணிக நிறுவனங்கள், உணவகங்கள் நவ.30-ஆம் தேதி வரை இரவு 10 மணி வரை இயங்க அனுமதித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
நிகழ்மாதத்தில் தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் 15-ஆம் தேதி வரை அனைத்து வியாபாரிகளுக்கும் இரவு 11.30 மணி வரை கடைகளை திறந்து வணிகம் செய்ய அனுமதி வழங்க வேண்டும்.
கரோனா பரவல் தடுப்பு விவகாரத்தில் அரசின் வழிகாட்டல்களை கண்டிப்பாக வணிகா்கள் பின்பற்றுவாா்கள் என்பது உறுதிப்பட தெரிவித்துக்கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.