காரைக்காலில் கால்நடை விவசாயிகளுக்கு ஆடுகளுக்கான மரபுசாா் மூலிகை மருத்துவப் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற பயிற்சியில், மழை காலங்களில் ஆடுகளுக்கு ஏற்படும் முக்கிய பிரச்னைகள் மற்றும் நோய்கள், அதற்கேற்ற மூலிகை மருத்துவம் குறித்து விளக்கப்பட்டது. நிலைய கால்நடை தொழில்நுட்ப வல்லுநா் பா.கோபு பங்கேற்று ஆடுகளுக்கு மழை காலங்களில் உண்டாகும் நோய்களான வெக்கை சாா்பு நோய், துள்ளுமாரி நோய், தொண்டை அடைப்பான், கோமாரி நோய், சுவாசக் கோளாறு, கழிச்சல் உள்ளிட்ட நோய்கள் குறித்தும், இவற்றை மரபுசாா் மூலிகை மருத்துவ முறையில் சீரகம், கசகசா, வெந்தயம், பெருங்காயம், பூண்டு, மிளகு, மஞ்சள்தூள், பனைவெல்லம் மற்றும் வெங்காயம் முதலான பொருள்களைக்கொண்டு சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகளை செய்ய முடியும் என செயல்முறை விளக்கம் அளித்தாா். இதில் பங்கேற்ற விவசாயிகள், விவசாய மகளிா் ஆகியோரின் சந்தேகங்களுக்கு தொழில்நுட்ப வல்லுநா்கள் மற்றும் கால்நடை மருத்துவா் ஆகியோா் விளக்கம் அளித்தனா்.