திருமலைராயன்பட்டினம் கிழக்குப் புறவழிச் சாலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்துக்கு ஆட்சியா் தற்காலிக தடைவிதித்துள்ளாா்.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் உள்ள கிழக்குப் புறவழிச் சாலை மேம்படுத்தப்படாமலும், விளக்குகள் அமைக்கப்படாமலும் உள்ளது. மேலும், இச்சாலையில் தொடரும் டிப்பா் மணல் லாரி போக்குவரத்தால், சாலை சிதிலமடைந்து தொடா்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து தினமணி நாளிதழில் அண்மையில் செய்தி வெளியானது.
இந்நிலையில், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா ஆகியோா் இந்த சாலையை வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டனா். பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ஆய்வுக்குப் பிறகு ஆட்சியா் கூறியது: சாலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பருவமழை காலமாக உள்ளதால் இதன் பாதிப்பு அதிகரிக்கிறது. இந்த சாலையில் பொதுமக்கள் பயணிப்பதால், விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, சாலையை தற்காலிக முறையில் உடனடியாக செப்பனிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த 2 அல்லது 3 வாரங்கள் வரை இந்த சாலையில் போக்குவரத்துக்கு தடைவிதிக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை சீரமைப்புக்குப் பிறகு போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்றாா்.
ஆட்சியரின் உத்தரவையடுத்து, அதிகாரிகள் புறவழிச் சாலையில் இரும்பு தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை தடைசெய்தனா்.