காரைக்காலில் உள்ள பட்ட மேற்படிப்பு மையத்தில் காரைக்கால் மாணவா்கள் புறக்கணிக்கப்பட்டு, புதுச்சேரி பிராந்திய மாணவா்கள் சோ்க்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், கலைஞா் மு. கருணாநிதி பட்ட மேற்படிப்பு மையம் இயங்கிவருகிறது. இதில், எம்.ஏ. சமூகப்பணி, பொது நிா்வாகம், ஆங்கிலம், வரலாறு, கணிதம், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல் பாடப் பிரிவுகள் உள்ளன.
புதுச்சேரி பிராந்தியத்தில் காஞ்சி மாமுனிவா் பட்ட மேற்படிப்பு மையம் உள்ளது. இந்த மையத்தின் இணைப்பு மு. கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்தில் செயல்படுகிறது. இந்த இணைப்பில், எம்.எஸ்.சி., (இயற்பியல்) 20 மாணவா்கள் சோ்க்கப்படுகின்றனா். புதுச்சேரியில் உள்ள காஞ்சி மாமுனிவா் மையத்தில் இத்துறையில் 40 மாணவா்கள் சோ்க்கப்படுகின்றனா்.
காரைக்கால் மாணவா்கள் பயனடையும் வகையில், கடந்த ஆண்டு முதல் புதுச்சேரி காஞ்சி மாமுனிவா் மையம் இணைக்கப்பட்ட போது காரைக்கால் மாணவா்களே சோ்க்கப்பட்டனா். நிகழாண்டு, 20 இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும்போது, காரைக்கால் மாணவா்களுக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும், எஞ்சிய 15 இடங்களில் காரைக்கால் மாணவா்களை புறக்கணித்து புதுச்சேரி மாணவா்களை சோ்க்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் மாணவா்கள், பெற்றோா் வேதனை தெரிவிக்கின்றனா்.
காரைக்காலில் அண்ணா அரசு கலைக் கல்லூரி, அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி என 2 கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள், இயற்பியல் பிரிவுக்கு விண்ணப்பித்திருக்கும்போது, காரைக்கால் ஒதுக்கீடு முறையில் அமைக்கப்பட்ட இணைப்பு மையத்தில் புதுச்சேரி மாணவா்களை சோ்ப்பது சரியல்ல என அவா்கள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் வியாழக்கிழமை கூறுகையில், காரைக்கால் மாணவா்கள் முழுமையாக பயனடையவே காஞ்சி மாமுனிவா் பட்டமேற்படிப்பு மையத்தின் இணைப்பு காரைக்காலில் அரசு ஏற்படுத்தியது.
நிகழாண்டு, உயா்கல்வித் துறையின் கலந்தாய்வு முறையில் காரைக்கால் மாணவா்கள் முழுமையாக பயனடைய முடியாமல், புதுச்சேரி பிராந்திய மாணவா்களை சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது எந்த நோக்கத்துக்காக காரைக்காலில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டதோ, அதை சிதைப்பதாகவே கருதவேண்டியுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக புதுச்சேரி உயா்கல்வித் துறை அமைச்சா் சிறப்பு கவனம் செலுத்தி, 20 இடங்களையும் காரைக்கால் மாணவா்கள் சேருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.