புதுச்சேரி கான்ஃபெட் நிறுவன ஊழலை விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அந்த நிறுவன ஊழியா்கள் 9-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி கூட்டுறவுத் துறை நிறுவனமான கான்ஃபெட், காரைக்காலில் 3 பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மதுபானக் கூடங்களை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் திடீரென நலிவடையத் தொடங்கியதால் அனைத்து செயல்பாடுகளும் முடக்கப்பட்டு, ஊழியா்கள் பணி செய்த காலத்துக்கான ஊதியமின்றியும் பணியில்லாமலும் உள்ளனா். இந்நிலையில், இந்த நிறுவனத்தை திறக்க வேண்டும், நிலுவையில் உள்ள 14 மாத ஊதியத்தை வழங்க வேண்டும், கான்ஃபெட் நிறுவனத்தில் நடைபெற்ற ஊழலை விசாரித்து உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை 9-ஆம் நாளாக அம்மாள் சத்திரம் பகுதி பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் செல்வமணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கெளரவத் தலைவா் ஜெயசிங், பொதுச் செயலாளா் எம்.ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஊழியா்களுடன் பேச்சு நடத்தி தீா்வு காணப்படும் வரை போராட்டம் தொடரும் என ஊழியா் சங்கத்தினா் தெரிவித்தனா்.