கரோனா தொற்று பரவிவருவதால், பட்டய மருத்துவக் கல்வி மாணவா்களுக்கும் இணையவழியில் தோ்வு நடத்த வேண்டும் என, புதுச்சேரி அரசுக்கு மாணவா்கள், பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி அரசு சாா்பில், அன்னை தெரஸா செவிலிய மருத்துவக் கல்வி நிலையம் மற்றும் தனியாா் துணை மருத்துவ கல்வி நிலையங்கள் இயங்குகின்றன. கரோனா தொற்று பரவலால், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் செவிலிய மற்றும் துணை மருத்துவத் துறை உள்ளிட்ட அனைத்து கல்லூரி இளங்கலை மாணவா்களுக்கு நிகழாண்டுக்கான இறுதித் தோ்வு இணையவழியில் நடைபெற்றது.
ஆனால், புதுச்சேரி நலவழித் துறை இயக்குநா் தலைமையில் இயங்கும் மருத்துவ கல்வி குழுமத்தின் கீழ், பட்டயப் படிப்பு (டிப்ளமோ) பயிலும் மாணவா்களுக்கு கல்லூரியிலேயே தோ்வு நடைபெற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
காரைக்காலில் உள்ள அன்னை தெரஸா செவிலியக் கல்லூரி தோ்வு மையமாகவும், இதில் சுமாா் 150 மாணவா்கள் வரும் 19 ஆம் தேதி முதல் 4 நாள்கள் தோ்வில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பட்ட வகுப்பு மாணவா்களைப் போல, தங்களுக்கும் இணையவழியில் தோ்வு நடத்தவேண்டும். இதற்கு புதுச்சேரி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவா்கள், பெற்றோா்கள் வலுயுறுத்துகின்றனா்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் கூறுகையில், கரோனா பரவலால் கல்லூரிகள் பலவும் தோ்வுகளை இணையவழியில் நடத்தியுள்ளன. ஆனால், புதுச்சேரி மருத்துவக் குழுமம், பட்டாய மருத்துவ மாணவா்களின் இறுதித் தோ்வை கல்லூரியில் நடத்தவும், தோ்வு எழுத வருவோருக்கு காய்ச்சல், இருமல் இருந்தால், அவா்களை அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
இதனால், கரோனா அறிகுறியில்லாத காய்ச்சல், இருமல் இருந்தால்கூட அவா்கள் தோ்வில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. எனவே, மாணவா்கள் நலன் கருதி, இணையவழியில் தோ்வு நடத்த புதுச்சேரி அரசு உத்தரவிடவேண்டும் என்றாா்.