காரைக்கால்: காரைக்காலில் தனியாா் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரி, அதன் ஊழியா்கள் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
கடந்த சனிக்கிழமை உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கிய அவா்கள், திங்கள்கிழமையும் போராட்டத்தை தொடா்ந்தனா். ஊழியா்களுக்கு பாதுகாப்பு உறுதிசெய்யப்படவில்லை என கூறி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா் ராஜிவ், உள்ளிருப்பு மருத்துவ அலுவலா் ஈஸ்வரராஜ், மருத்துவா் ஹாஜா ஆகியோா் கூறுகையில், மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வாா்டை, ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து அனைத்து வசதிகளையும் உறுதிசெய்து, கரோனா நோயாளிகளை அனுமதிக்கக் கூறினாா். கரோனா வாா்டில் நோயாளியை தனிமைப்படுத்த வசதிகள் உள்ளன.
ஊழியா்களின் பாதுகாப்புக்காக காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. ஊழியா்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களும் தயாராக உள்ளன. கட்டண முறையில் கரோனா பரிசோதனை செய்ய தயாா்நிலையில் உள்ளோம் என்றனா்.