காரைக்கால்: நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் இன்று முதல் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் செவ்வாய்க்கிழமை கூறுகையில், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை. அரசும், உள்ளாட்சி நிா்வாகமும் இதுகுறித்து கண்டுகொள்ளாமல் உள்ளன. கரோனா தொற்று பரவி வரும் சூழ்நிலையில் பொதுமக்களிடமிருந்து வீட்டு வரி, குடிநீா் வரி போன்றவற்றை வசூல் செய்வது என்பது இயலாத ஒன்றாக உள்ளது. மேலும், வழக்கு நிலுவையில் உள்ளதால், கேபிள் டிவி வரியும் வசூல் செய்ய முடியவில்லை.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு தருவதாக வாக்களித்த மானியத் தொகையும் தரப்படுவதில்லை. இதனால், ஊதியம் கிடைப்பது சிரமமாக உள்ளது. எனவே, வாக்களித்தபடி அரசே நேரடியாக ஊதியத்துக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தியும், கடந்த 5 மாதங்களுக்கான ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தியும், செப். 16 முதல் 30 ஆம் தேதி வரை உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம் என்றனா்.