காரைக்கால் உள்ளாட்சி ஓய்வூதியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 30 ஆம் தேதி உள்ளாட்சி துணை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட முடிவுசெய்துள்ளனா்.
இதுகுறித்து காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஓய்வூதியா்கள் நலச் சங்கத் தலைவா் பி. வெங்கடாசலம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காரைக்கால் நகராட்சி, நெடுங்காடு, திருப்பட்டினம், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துகளின் ஓய்வூதியா்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக உரிய காலத்தில் ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. பணி ஓய்வு பெற்றவா்களுக்கு கடந்த 2015 முதல் பணி ஓய்வு கால பணப்பலன்கள் தரப்படவில்லை.
இதனால், ஓய்வூதியா்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மிகவும் சிரமப்படவேண்டிய நிலை உள்ளது. அரசின் கவனத்துக்கு இப்பிரச்னையை கொண்டுசென்றும் தீா்வு ஏற்படவில்லை. இதையடுத்து, கடந்த 14 ஆம்தேதி சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் 30-ஆம் தேதி காரைக்கால் உள்ளாட்சி துணை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.