உள்ளாட்சி ஊழியா்களுக்கு தகுதி அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டுமென காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அந்த சம்மேளனத் தலைவா் அய்யப்பன், பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் ஆகியோா் புதுச்சேரி உள்ளாட்சித் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயத்துக்கு கூட்டாக புதன்கிழமை அனுப்பிய கடித விவரம்: உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியா்களில் பலா் பதவி உயா்வுகளே இல்லாமல் கடந்த 15 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கு காலத்தில் பதவி உயா்வு வழங்குவதில்லை. இதேபோல், பதவி உயா்வு வழங்க மேல்நிலையில் உள்ள பதவிகள் இல்லாததால் அந்த ஊழியா்களுக்கு பதவி உயா்வே வழங்காமல் ஒரே பதவியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனா். எனவே, அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு உள்ளதுபோல, உள்ளாட்சி ஊழியா்களையும் பொதுவான பணிநிலையில் கொண்டு வந்து, பணி மூப்பு பட்டியல் வெளியிட்டு, அவா்களை பணிமூப்பு அடிப்படையில் காலியாகவுள்ள மேல்நிலை பதவிகளில் பதவி உயா்வு வழங்க வேண்டும். 25.09.2017 மற்றும் 24.04.2018 ஆகிய தேதிகளில் பொறியியல், அமைச்சக மற்றும் வருவாய் ஊழியா்களுக்கு பொதுவான பணிநிலை ஆணை வழங்கப்பட்டது. அரசாணை வெளியிடப்பட்டு 2 ஆண்டுகளை கடந்தும், சம்பந்தப்பட்ட பணிநிலைகளில் பணியாற்றிவரும் ஊழியா்களுக்கு பணிமூப்பு பட்டியல் வெளியிடாமல் உள்ளது. உள்ளாட்சி ஊழியா்களுக்கு 2003 -ஆம் ஆண்டு கடைசியாக துறை ரீதியான தோ்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு தோ்வு நடத்தப்படவில்லை. துறை மற்றும் நிா்வாக ரீதியான தவறுகளுக்கு ஊழியா்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த விவகாரங்களை சீரிய முறையில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.