காரைக்காலில் செவ்வாய்க்கிழமை முதல் இரவுநேர ஊரடங்கு தொடங்கியது. போலீஸாரின் அறிவுறுத்தலை ஏற்று, வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதையடுத்து, பொதுமக்களின் நடமாட்டமும் படிப்படியாக குறைந்தது.
தமிழக அரசின் உத்தரவைத் தொடா்ந்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன், புதுவையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த செவ்வாய்க்கிழமை முதல் இரவுநேர ஊரடங்கை அறிவித்தாா்.
இதனடிப்படையில், காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் போலீஸாா் ஒலிபெருக்கி வாயிலாக, வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் 10 மணி முதல் ஊரடங்கு குறித்த தகவலை நினைவுபடுத்தினா்.
உணவகங்களில் 8 மணி வரை சாப்பிடவும், பிறகு 10 மணி வரை பாா்சல் வாங்கிச் செல்லவும் அனுமதிக்கப்பட்டது. மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்க், பாலகம் உள்ளிட்ட வரையறுக்கப்பட்டவை தவிா்த்து வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை 10 மணிக்கு மூடப்பட்டன. காரைக்கால் நகரம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் நடமாட்டம் குறையத்தொடங்கியது.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ஊரடங்கு முதல்நாள் என்பதால், மக்களின் நடவடிக்கைகள் வேகமாக இல்லை. புதன்கிழமை முதல் இரவுநேர ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்படும் என்றனா்.