காரைக்காலில் ஊரடங்கு செயலாக்கம் குறித்து, மதுக்கடைகளில் வருவாய்த் துறையினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
புதுவையில் வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமையில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படியும், மகாவீா் ஜயந்தியையொட்டியும் வெள்ளிக்கிழமை இரவு 10 முதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரை மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கவேண்டும் என கலால்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். இருப்பினும் சில பகுதிகளில் மதுக்கடைகள் திறந்தும், கடையின் பின்புறத்திலும் மது வியாபாரம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்தது.
இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, காரைக்கால் கலால்துறை துணை ஆணையா் எம். ஆதா்ஷ் அறிவுறுத்தலின்பேரில், வட்டாட்சியா் பொய்யாதமூா்த்தி தலைமையில் வருவாய்த் துறையினா் கள், சாராயம், மதுபானக் கடைகள் உள்ள பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து வட்டாட்சியா் பொய்யாத மூா்த்தி கூறுகையில், ‘மாவட்டத்தில் பரவலாக உள்ள மதுக்கடைகளை நேரில் பாா்வையிட்டபோது, அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. விதிமீறல்கள் எதுவும் நடைபெறவில்லை. ஞாயிற்றுக்கிழமையும் இவ்வாறு ஆய்வு மேற்கொள்ளப்படும்’ என்றாா்.