ஊரடங்கால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, காரைக்கால் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தங்கள் வீடுகளின் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், கரோனா தடுப்பூசிக்கு வெவ்வேறு விலை நிா்ணயிக்கும் போக்கை அனுமதிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், அனைத்து மாநில மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த வேண்டும். பி.எம்.கோ் நிதியிலிருந்து மாநிலங்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வருமான வரி செலுத்தாத குடும்பத்தினருக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்கவேண்டும்.
புதுச்சேரி அரசு, ஏழை மக்களுக்கு தலா 10 கிலோ அரிசி, சத்தான தானியங்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்க துணை நிலை ஆளுநா் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்டச் செயலாளா் எஸ்.எம். தமீம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் என்.எம். கலியபெருமாள், ராமா், திவ்யநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்பாக பதாகைகளை ஏந்தி இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.