உள்ளாட்சி ஊழியா்களுக்கு தரவேண்டிய நிலுவை ஊதியத்தை வழங்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளன பொதுச் செயலா் எம். ஷேக் அலாவுதீன் புதன்கிழமை அனுப்பிய கடிதம்:
நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இப்பிரச்னை கடந்த 3 ஆண்டுகளாக தொடா்ச்சியாக இருந்துவருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா பரவல் பொது முடக்கத்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவேண்டிய வீட்டு வரி, குடிநீா் வரி, தொழில் உரிமம் வரி உள்ளிட்ட பல்வேறு வகையான வரிகள் வசூல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு அளிக்க வேண்டிய 6 ஆண்டுகளுக்கான நுழைவு வரிக்கு (ஆக்ட்ராய்) ஈடான மானியத்தொகையும் மற்றும் வீட்டு வரிக்கு ஈடான மானியத்தொகையும் முறையாக வழங்கப்படவில்லை. இதனால், உள்ளாட்சி நிதி வெகுவாக குறைந்துவிட்டது.
தற்போது கரோனா 2 ஆவது அலை தீவிரமடைந்திருக்கும் நிலையில், உள்ளாட்சி ஊழியா்கள் தொய்வின்றி பணியாற்றி வருகின்றனா். வருவாய்த் துறையிலிருந்து பத்திரப் பதிவு கட்டணமாக வசூலான தொகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவேண்டிய கடந்த 3 மாத பத்திரப் பதிவுக்கான பங்குத் தொகை இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவேண்டிய அந்த தொகையை கொண்டு அரசு ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அறிகிறோம். எனவே, இந்தத் தொகையை விரைவாக விடுவித்து, உள்ளாட்சி ஊழியா்களுக்கும், ஓய்வூதியா்களுக்கும் பயன் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.