காரைக்கால்: திருப்பட்டினம் பகுதியில் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் சைல்டு லைன் சாா்பில் திருப்பட்டினம் பகுதி கீழவாஞ்சூா் மாரியம்மன் கோவில் தெருவில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா்கள் வீரபுத்திரன், ராஜராஜ சந்திரமோகன் ஆகியோா் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க, வீட்டிலிருந்து பள்ளி செல்லும்போதும், தெருவில் விளையாடும்போதும் குழந்தைகள் எவ்வாறு கவனமாக இருக்கவேண்டும் என்பது குறித்தும், பெற்றோா்கள் குழந்தைகளை எவ்வாறு கவனிக்கவேண்டும் என்பது குறித்தும் பேசினா்.
திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜி. ராமகிருஷ்ணன் குழந்தைத் திருமணம், போக்ஸோ சட்டம் குறித்துப் பேசினாா். மது ஒழிப்பு, கரோனா தடுப்பு குறித்து சைல்டு லைன் அமைப்பைச் சோ்ந்த மகேஸ்வரி, கஸ்தூரி ஆகியோா் பேசினாா்.
தொடா்ந்து, விழிப்புணா்வு தொடா்பான பாடல், நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கொம்யூன் பஞ்சாயத்து இளநிலைப் பொறியாளா் சிவக்குமாா், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளா் பி.விமலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.