காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் பிரமோத்ஸவத்தையொட்டி, பந்தல்கால் முகூா்த்தம் புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் 15 நாள்கள் நடைபெறும் பிரமோத்ஸவம், வரும் 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதையொட்டி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா, 27 ஆம் தேதி திருமலைராயன்பட்டினத்தில் திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரிராஜப் பெருமாளுடன் சோ்ந்து கடற்கரையில் மாசி மக தீா்த்தவாரி, மாா்ச் 1 ஆம் தேதி சந்திரபுஷ்கரணியில் தெப்ப உத்ஸவம், 2 ஆம் தேதி விடையாற்றி நடைபெறவுள்ளது.
விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் பந்தல்கால் முகூா்த்தம் புதன்கிழமை நடைபெற்றது. பந்தல்காலுக்கு சிறப்புத் திருமஞ்சனம், தீபாராதனை செய்யப்பட்டு, பிராகார வலம்வந்து கோயில் வளாகத்தில் நடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கைலாசநாதா் கோயில் அறங்காவல் வாரியத்தினா், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவினா் செய்துள்ளனா்.