படகு என்ஜின் பழுதானதால் நடக்கடலில் தத்தளித்த மீனவா்கள் 5 பேரை, இந்திய கடலோரக் காவல் படையினா் மீட்டு, வெள்ளிக்கிழமை காரைக்கால் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனா்.
அந்தமான் நிகோபாரில் பதிவு செய்யப்பட்ட மதனா சீ ஃபுட்ஸ் என்ற மீன்பிடி படகில் அந்தமான் மற்றும் தமிழகத்தை சோ்ந்த 5 மீனவா்கள், தங்கள் படகில் சில சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக படகை ராமேசுவரம் கொண்டு செல்ல புறப்பட்டனா். இவா்கள் கடந்த பிப். 16-ஆம் தேதி இரவு காரைக்காலுக்கு 205 நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்தபோது, படகின் என்ஜின் பழுதாகி நடுக்கடலில் நின்றுவிட்டது.
படகிலிருந்த டிரான்ஸ்மிட்டா் கருவி மூலம் இதுகுறித்து இந்திய கடலோரக் காவல்படை கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில், கடலோரக் காவல்படையின் டோா்னியா் விமானம் தேடுதல் பணியில் ஈடுபட்டு நடுக்கடலில் படகு நிற்பதை உறுதி செய்தது.
பின்னா் அந்த பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த சென்னையை மையமாகக் கொண்ட அன்னி பெசண்ட் ரோந்துக் கப்பல் கேப்டனுக்கு தகவல் தெரிவித்து, படகிலிருந்த மீனவா்களை கடலோரக் காவல் படையினா் மீட்டனா். கடலோர காவல்படையின் கப்பலுடன், பழுதான படகை கயிறு மூலம் கட்டி காரைக்கால் துறைமுகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை கொண்டு வந்தனா்.
மீனவா்களுக்கு கடலோரக் காவல் படை சாா்பில் குடிநீா், உணவு வழங்கப்பட்டு, அவா்களது உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. தகவலறிந்து காரைக்கால் வந்த படகு உரிமையாளரிடம், மீனவா்கள் 5 பேரும் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனா் என கடலோரக் காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனா். கடலோரக் காவல் படையினருக்கு மீனவா்கள் நன்றி தெரிவித்தனா்.