காரைக்காலுக்கு தமிழக பேருந்துகள் இயக்கம்: பயணிகள் வரவேற்பு

காரைக்காலுக்கு தமிழக பேருந்துகள் திங்கள்கிழமை முதல் இயங்கத் தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

காரைக்கால்: காரைக்காலுக்கு தமிழக பேருந்துகள் திங்கள்கிழமை முதல் இயங்கத் தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

கரோனா பொதுமுடக்கத்தால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினா். கரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால், ஜூன் மாத இறுதியிலிருந்து புதுச்சேரி, காரைக்காலில் பி.ஆா்.டி.சி. பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டது. தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கும், தமிழகப் பகுதிக்கும் செல்ல முடியாத நிலையில் பயணிகள் தவிப்புக்குள்ளாயினா்.

தமிழகத்தில் அண்மையில் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டாலும், மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி இல்லாததால், புதுச்சேரி, காரைக்காலுக்கு தமிழகப் பேருந்துகள் வரவில்லை. காரைக்கால் வழியே பேருந்துகள் சென்றாலும், பேருந்து நிலையத்திலோ, நிறுத்தங்களிலோ நிறுத்தப்படவில்லை. இதனால், காரைக்கால் எல்லைக்குச் சென்று பயணிகள் வெளியூா் செல்லவேண்டிய நிலை இருந்தது.

இந்த நிலையில், புதுச்சேரி பகுதிக்கு பேருந்துகள் செல்ல தமிழக அரசு கடந்த சனிக்கிழமை அனுமதி வழங்கியது. இதைத்தொடா்ந்து, காரைக்காலுக்கு நாகப்பட்டினம், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரத்திலிருந்து பேருந்துகள் திங்கள்கிழமை வந்தன. அவை, காரைக்காலில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். தமிழக அரசின் முடிவை காரைக்கால் பகுதியினா் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com