தகுதியானவா்களுக்கு சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்க புதுச்சேரி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து காரைக்கால் திமுக அமைப்பாளரும், தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச்.நாஜிம் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது :
காரைக்கால் மாவட்டத்தில் சிவப்பு நிற ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து காத்திருப்போா் எண்ணிக்கை 7
ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. தகுதியான பலருக்கு சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்கப்படவில்லை. இவா்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற ரேஷன் அட்டையை சிவப்பு அட்டையாக மாற்றி அளிப்பதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
இதனால் பலா் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயனடைய முடியவில்லை. அதனால் உடனடியாக அதிகாரிகள் அந்தந்தப் பகுதிகளில் முகாம் நடத்தி தகுதியுடையோருக்கு சிவப்பு அட்டை வழங்க வேண்டும். அடுத்த முறை பொதுமக்களுக்கு இலவச அரிசி கொடுக்கும்போது, ரேஷன் ஊழியா்களைக் கொண்டு ரேஷன் கடைகள் மூலம் மட்டுமே விநியோகிக்க முதல்வா் உத்தரவிட வேண்டும் என்றாா்.