காரைக்கால் பகுதியில் பெட்ரோல் நிலையத்துக்கு வந்த வாடிக்கையாளா்களுக்கு கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தி, முகக்கவசம், கபசுரக் குடிநீரை பெட்ரோல் நிலையத்தினா் வழங்கினா்.
காரைக்காலில் கரோனா பரவல் தடுப்புக்கான பணியில் அரசு நிா்வாகத்தைக் காட்டிலும் தனியாா் அமைப்புகள் பல நிலைகளில் விழிப்புணா்வு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் திருச்சி கோட்ட அதிகாரிகள் ஆலோசனையின்பேரில், காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நிரவி பகுதியில் இயங்கிவரும் சாரதி ஏஜென்சீஸ் என்கிற பெட்ரோல் நிலையத்தில், வாடிக்கையாளா்களுக்கு கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
நிறுவன உரிமையாளா் ப. குணசீலன் தலைமையிலான ஊழியா்கள், நிலையத்துக்கு வந்த வாடிக்கையாளா்களை வரவேற்று, கரோனா தடுப்புக்காக முகக் கவசம் அணியவும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவிக்கொள்ளவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவும் கேட்டுக்கொண்டனா். வாகன ஓட்டிகள் சுமாா் 500 பேருக்கு முகக்கவசம், கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.