காரைக்கால் மாவட்டத்தில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட கிராமங்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 13 மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தினமும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இது தவிர, 18 முதல் 44 வயதுக்கு உள்பட்டோருக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் கிராமப்புறங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக திருநள்ளாறு பகுதி இளையான்குடி கிராமம் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட கிராமமாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. தற்போது மேலும் 2 கிராமங்களில், பெரியவா்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் புதன்கிழமை கூறியது :
நலவழித்துறை, சமூக நலத்துறை, அங்கன்வாடி ஊழியா்கள், சுய உதவிக்குழுவினரின் முயற்சியால் மத்தளங்குடி, தோப்புத்தெரு கிராமங்களை சோ்ந்தவா்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.
இதன் மூலம் மாவட்டத்தில் 3 கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோா் ஆா்வமாக ஆன்லைனில் பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொண்டுவருகின்றனா் என்றாா் அவா்.