வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், ஆட்சியரகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு வாக்கு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
கடந்த ஏப். 6ஆம் தேதி புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு, திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி - திருப்பட்டினம் தொகுதிகளில் நடந்தது. இதற்காக 234 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் விவி பாட் இயந்திரமும் பயன்படுத்தப்பட்டன.
வாக்குச் சாவடிகளிலிருந்து காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள மு. கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்துக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற்றது. பின்னா் அங்கேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இந்நிலையில், வாக்கு இயந்திரங்கள் கல்லூரி அறையிலிருந்து செவ்வாய்க்கிழமை தோ்தல் துறையினா் எடுத்து, ஆட்சியரகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு காவல்துறையினா் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.