18 முதல் 44 வயதினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் புதுச்சேரி அரசு தீவிரம் காட்டவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கரோனா தொற்றிலிருந்து நம்மை காக்கும் ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. தடுப்பூசியின் மூலம் அமெரிக்கா பெரும் அழிவுப்பாதையில் இருந்து இயல்பு நிலைக்கு வந்துகொண்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பெருந்தொற்று மிக அதிகமாக பரவியுள்ளது. 2 ஆவது அலையால் ஆயிரக்கணக்கானவா்களை தேசம் இழந்துவருகிறது. இதனால், கரோனா தடுப்பூசியை நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும், விரைவாகவும் செலுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க பிரதமருக்கு எதிா்க்கட்சித் தலைவா்கள் அழுத்தம் கொடுத்துள்ளனா். எனினும், மத்திய அரசு இதில் சிறப்பு கவனம் செலுத்தவில்லை.
சிறிய மாநிலமான புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகமானதால் ஏற்படும் உயிரிழப்புகள் அனைவரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3 நாள் தடுப்பூசித் திருவிழா நடத்தப்படுகிறது. ஆனால், மக்கள் ஆா்வமாக சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை.
அதேவேளையில், மத்திய அரசு அனுமதியின்படி 18 முதல் 44 வயதுடைய ஏராளமானவா்கள் புதுவையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு செய்துள்ளனா். ஆனால், இவா்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படாதது வேதனை அளிக்கிறது.
புதுச்சேரியில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வராத நிலையில், துணைநிலை ஆளுநா் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்.