நிலுவையில் உள்ள 6 மாத ஊதியத்தை வழங்கக்கோரியும், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசே நேரடியாக ஊதியம் வழங்கக்கோரியும், நகராட்சி ஊழியா்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினா்.
காரைக்கால் நகராட்சி ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.
போராட்டத்துக்கு சங்க தலைவா் சண்முகராஜ் தலைமை வகித்தாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், துணை தலைவா் அய்யப்பன், இணை பொதுச் செயலாளா் ஜோதிபாசு, ஓய்வூதியதாரா்கள் சங்க தலைவா் ஜெயராமன் ஆகியோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்கக்கூடிய வரி வருவாய் பல நிலைகளில் குறைந்துவிட்டது. இதனால் காரைக்கால் நகராட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. நிலுவையில் உள்ள 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும் என வலியுறுத்தினா்.
இவ்வேலை நிறுத்த போராட்டம் நீடித்தால் துப்புரவுப் பணிகள், பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குவது, வரி வசூல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.