காரைக்காலில் 48 மணி நேர தொடா் ( மாரத்தான்) கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை (செப். 3) காலை தொடங்கவுள்ளதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியது :
புதுவை அரசு, காரைக்கால் மாவட்டத்தில் 48 மணி நேர மாரத்தான் தடுப்பூசி முகாம் செப். 3 காலை 8 மணி முதல் 5-ஆம் தேதி காலை 8 மணி வரை நடைபெறுகிறது.
பகல், இரவு என 48 மணி நேரம் மாவட்டத்தில் 11 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருநள்ளாறு சமுதாய நலவழி மையம், காரைக்கால் அரசு மருத்துவமனை என 13 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்.
பகலில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள நேரமில்லாதவா்கள் இரவில் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள் முதல் தவணையாகவும், முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 84 நாள்களை கடந்தவா்கள் 2-ஆவது தவணை தடுப்பூசியை இந்த மையங்களில் செலுத்திக்கொள்ளலாம் என்றாா்.