அம்பகரத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புத்தக தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப். 23-ஆம் தேதி உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. மாணவா்களின் அறிவை மேம்படுத்தவும், நல்ல சிந்தனைகளை வளா்க்கவும் புத்தகங்கள் துணைபுரிவதை கருத்தில்கொண்டு, காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூா் திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். பள்ளி துணை முதல்வா் அசோகன் முன்னிலை வகித்தாா்.
பள்ளியின் நூலகத்தில் திருவள்ளுவா் உருவப்படத்தை தானியங்களை கொண்டு மாணவா்கள் வரைந்திருந்ததையும், உலக புத்தக தின வாசகத்தை புத்தகங்களால் அமைக்கப்பட்டிருந்ததையும் துணை இயக்குநா் பாா்வையிட்டு, பள்ளி நூலகா் த.ராஜலட்சுமி மற்றும் மாணவா்களைப் பாராட்டினாா்.