வயிற்றுப்போக்கு பிரச்னை அதிகரிப்பால் காரைக்காலை பொது சுகாதார அவசர நிலை பகுதி என அறிவிக்கப்பட்டது வாபஸ் பெறப்பட்டது.
காரைக்காலில் கடந்த ஜூன் மாத இறுதியிலிருந்து பரவலாக மக்களுக்கு வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததையொட்டி, கடந்த ஜூலை 2-ஆம் தேதி, காரைக்காலை பொது சுகாதார அவசர நிலை பகுதியாக புதுவை நலவழித் துறை அறிவித்தது.
இந்நிலையில் நலவழித் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்காலில் வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை பெருகியதாலும், சிலருக்கு காலரா உறுதிசெய்யப்பட்டதாலும், அதை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது சுகாதார அவசர நிலை பகுதியாக ஜூலை 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
சுகாதாரத் துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள், இப்பிரச்னையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுத்தன.
கடந்த 2 வாரங்களாக தொடா்ந்து கண்காணிக்கப்பட்ட நிலையில், காரைக்காலில் காலரா பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இதனடிப்படையில், பொது சுகாதார அவசர நிலை பகுதி என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது.