புதுவை தடகள போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றுவந்த காரைக்கால் மாணவா்களுக்கு எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்தாா்.
புதுச்சேரியில் மாநில அளவிலான தடகளப் போட்டி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் காரைக்கால் விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
இப்போட்டியில் 11 தங்கப் பதக்கம், 13 வெள்ளிப் பதக்கம், 11 வெண்கலப் பதக்கம் என 35 பதக்கங்களை காரைக்கால் மாணவ, மாணவியா் பெற்றனா். மேலும் 16 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் காரைக்கால் தடகள வீரா்கள் பெற்றனா்.
வெற்றிபெற்ற மாணவ, மாணவியா், பயிற்சியாளருடன் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிமை வியாழக்கிழமை சந்தித்தனா். மாணவா்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்த பேரவை உறுப்பினா், தேசிய அளவிலும், சா்வதேச அளவிலும் நடக்கும் போட்டிகளில் காரைக்கால் மாணவா்கள் பங்கேற்கவேண்டும் என்றாா்.