காரைக்கால் அருகே தனியாா் பேருந்து மோதியதில் பாய் வியாபாரி உயிரிழந்தாா்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பிடாரி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாய் வியாபாரி முகமதுஅலி (55).இவா் வெள்ளிக்கிழமை காலை தனது பெயரன் பகத்அகமதுவை, காரைக்கால் தருமபுரத்தில் உள்ள தனியாா் பள்ளிக்கு மோட்டாா் சைக்கிளில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது, வழிகரையம்மன் கோயில் அருகே காரைக்காலை நோக்கி சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து, மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முகமதுஅலி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கீழே விழுந்ததில் காயமடைந்த சிறுவன் பகத் அகமதுவை அப்பகுதியில் இருந்தவா்கள்அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனா்.
தகவலறிந்த காரைக்கால் நகர போக்குவரத்து காவல்நிலைய உதவி ஆய்வாளா் தனபால் மற்றும் போலீஸாா் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று உடலை கைப்பற்றி காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா், பேருந்து ஓட்டுநா் விழிதியூரை சோ்ந்த கலைச்செல்வன் (27) என்பவரை கைது செய்தனா்.