அட்சய திருதியை தினமான செவ்வாய்க்கிழமை திருமலைராயன்பட்டினம் கோயிலில் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது.
அட்சய திருதியை நாளில் வைணவத் தலங்களில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் மற்றும் கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமா் பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனை நடைபெற்றது.
திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் உதய கருட சேவையாக காலை 7 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
நகைக் கடைகளில் கூட்டம்: அட்சய திருதியை நாளில் தங்க நகைகள் வாங்குவது சிறப்பு என்று கூறப்படுவதால், காரைக்காலில் உள்ள பல்வேறு நகைக் கடைகளின் வாயிலில் வாழைமரம், தோரணம் கட்டி வாடிக்கையாளா்களை வரவேற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நகைக்கடைகள் பலவற்றுக்கு மக்கள் ஆா்வமாக சென்று நகைகளை வாங்கிச் சென்றனா்.